அத்தியாயம் 27
தன் காரை எடுத்துக் கொண்டு அஸ்வின் வேகமாக பீச்சிற்குச் சென்றான். அவனுக்கு சுபாவின் மீது கோபமும் இருக்கிறது காதலும் இருக்கிறது. சுபா தன்னுடைய குணத்தை புரிந்துக் கொள்ளவில்லை. அஸ்வினின் மனதில் இப்போது பழைய நினைவுகள் வந்தது. சுபா வீட்டை விட்டுப் போனதும் மாளவிகா சோனியாவோடு வந்து சோனியாவை திருமணம் புரிய கேட்டாள்.
குழந்தை உண்டானவள் என்று கூட பார்க்காமல் அவளின் கேள்வி அவனுக்கு எரிச்சல் மூட்டியதால் அவளை அடிக்க கையை ஓங்கினான். பின் அவளின் நிலையை அறிந்து கையை கீழே இறக்கினான். அப்போதே முடிவு செய்தான் இனி சோனியாவை வேலையில் வைக்க கூடாது என்று அவளை வேலையை விட்டு தூக்கினான்.
சுபாவிற்கு தன் மீது வருத்தம் இருக்கலாம் ஏனெனில் அவளை அடைந்த முறை தப்பு ஆனால் தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் அளவிற்கு தாம் என்ன செய்தோம் என்று யோசித்துக் கொண்டிருந்த அஸ்வினிற்கு எரிச்சல் தான் வந்தது. எவ்வளவு நேரம் பீச்சில் நின்றானோ அவனுக்கே தெரியவில்லை.
வீட்டில் சுபா படுக்காமல் அஸ்வினிற்காகக் காத்திருந்தாள். அஸ்வின் வெளியே கோபமாகச் சென்றது அவளுக்கு பயத்தை அளித்தது. அஸ்வின் சென்று ஒரு மணி நேரமான பிறகும் வரவில்லை தன்னை மீறி சோஃபாவில் படுத்து உறங்கினாள். அஸ்வின் வீட்டிற்கு வர இரண்டு மணி ஆனது. அப்போது சோஃபாவில் அமர்ந்தே தூங்கிக் கொண்டிருந்த சுபாவை தூக்கி கட்டிலில் ஒழுங்காக படுக்க வைத்தான்.
பின் சித்விக் பின் பக்கத்தில் உறங்கியவன் காலையில் எழவே மணி எட்டானது. அவன் எழுந்திருக்கும் முன்னரே சுபா எழுந்து குளித்து விட்டு சாமி கும்பிட்டு முடிக்கும் போது அஸ்வினும் எழுந்து சித்விக்கை அழைத்துக் கொண்டு வந்தான்.
“குட் மார்னிங் சித்து அம்மா கிட்ட வாங்க பிரஷ் பண்ணனும்” என்று சித்விக்கை அழைத்தாள். ஆனால் சித்விக் சுபாவிடம் வரவில்லை. “நான் அப்பாட்ட தான் இருக்கு” என்று மழலையில் அஸ்வினைக் கட்டிக்கொண்டான். சுபாவிற்கு தான் அசிங்கமாக போனது தன்னிடம் மட்டுமே மூன்று வருடங்கள் உலகம் என்று இருந்த பிள்ளை இப்போது அஸ்வினிடம் நெருக்கமாக இருப்பதால் அவள் மனதில் ஏதோ ஒரு வலி.
ஒருவேளை நம் மேல் இருக்கும் கோபத்தில் சித்துவை தன்னிடம் இருந்து பிரித்தி விடுவாரோ என்று பயந்தாள். சுபாவின் மனநிலையை ஓரளவு புரிந்துக் கொண்ட அஸ்வின், “சித்து அம்மா கிட்ட போ அப்பாக்கு வேலை இருக்கு கண்ணா, அப்பா வேலைக்கு போனால் சித்துவிற்கு பிடிச்ச சாக்லேட்ஸ் ஐஸ்கிரீம்ஸ் லாம் வாங்க முடியும்” என்று கொஞ்சினான். அதற்கு பின் தான் சித்து சுபாவிடம் சென்றான்.
அஸ்வின் சுபாவிடம் எதுவும் பேசவில்லை. அஸ்வின் சாப்பிட்டு முடித்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பும் போது அரவிந்த்தும், தீபிகாவும் தங்கள் குழந்தையோடு வந்தார்கள். சசிகலா, வாசுதேவன் அஸ்வினிடம் ஒரு வார்த்தை பேசாமல் தீபிகா நேராக வந்து தன் அக்காவிடம் அழுதாள்.
“அக்கா எப்படி கா எங்களை விட்டு போக உனக்கு மனசு வந்தது? அப்பா, அம்மா எப்படி துடிச்சிப் போய்ட்டாங்க தெரியுமா? இந்த நாலு வருஷம் அவங்க வீட்ட விட்டே வெளியே வரலைக்கா, நீ அப்போவே இவர் கூட வாழப்பிடிக்காம இருந்த… நான் தான் இவர் நல்லவர் அது இதுனு உன்னை இங்க இருக்க வெச்சேன். எல்லாம் என் தப்பு தான்” என்று தன் தலையில் அடித்துக் கொண்டே அழுதாள்.
அப்படியே எதுவும் பேசாமல் சிலையாய் நின்றாள் சுபா.
“தீபிகா என்ன இது அவளே நாலு வருஷம் கழிச்சு வந்திருக்கா எதுக்கு இதெல்லாம் பேசிட்டு இருக்க அங்க பாரு நீ பேசுன எல்லாத்தையும் அஸ்வின் வேற கேட்டுட்டான்” என்று அரவிந்த் சொல்லும் போது சுபா சுயநினைவிற்கு வந்தாள்.
‘அச்சோ நம்ம இவ்வளவு நேரம் அமைதியாக இருந்திருக்கோமே அஸ்வின் நம்மளைப் பத்தி என்ன நினைச்சிருப்பார்’ என்று தன்னையே நொந்துக் கொண்டவள் தீபிகா பேசிட்டு இருக்கும் போது அஸ்வினைத் தேடிச் சென்றாள். அதற்குள் அவனுடைய கார் வீட்டை தாண்டி ஆபிஸிற்கு சென்றுக்கொண்டிருந்தது.
‘அய்யோ அஸ்வின் என்ன நினைச்சிருப்பாரு’ என்று யோசித்துக் கொண்டே உள்ளே வந்தாள் சுபா.
“தீபிகா நீ சொல்றது லாம் புரியுது. ஆனா இப்போ தான் சுபா வந்துட்டால்ல இனிமேல் எல்லாமே நல்லது தான் நடக்கும் மனச போட்டு குழப்பிக்காத” என்றார் சசிகலா.
“தீபு அம் சாரி அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும் இனிமேல் இந்த மாதிரி நான் பண்ண மாட்டேன்” என்று சர்வேஷைக் கொஞ்சினாள்.
ஆபிஸிற்கு வந்த அஸ்வினுக்கு மனதில் அமைதி இல்லை.தீபிகா தன்னைப் பற்றி கூறும் போது சுபா மறுப்பேதும் கூறவில்லை. தீபிகாவின் வற்புறுத்தலால் தான் சுபா இருந்தாளா என்று கடுப்பானவன் சிகரெட் எடுத்து பிடிக்க ஆரம்பித்தான்.
“சுபா நீ இந்த வீட்ட விட்டு போன அப்பறம் அஸ்வின் எங்க கூட லாம் சரியாவே பேசுறது இல்லை ஆனா அஸ்வின் உன்னை ரொம்ப மிஸ் பண்ணான் என்னால அத உணர முடிந்தது” என்றான் அரவிந்த்.
“இவ்வளவு நாள் எங்க இருந்த?” என்று கேட்டான் அரவிந்த். அவனிடம் மற்றும் தீபிகாவிடம் அனைத்தையும் கூறி முடித்தாள் சுபா.
“அக்கா, அம்மாவும் அப்பாவும் இன்னிக்கு மத்தியானம் இங்க வராங்க உன்னைப் பார்க்க” என்றாள்.
“அப்படியா! ரொம்ப சந்தோஷம் டி அவங்க இரண்டு பேரும் என் மேல ரொம்ப கோவமா இருப்பாங்கல்ல” என்று வருந்தினாள்.
வாசுதேவன் மற்றும் சசிகலா நிலைமையை சாதாரணம் ஆக்க தீபிகாவிடம் பேச்சுக் கொடுத்தனர். அவளின் கோபம் இறங்கவில்லை என்றாலும் சுபாவின் வேண்டுதலின் படி ஒழுங்காகப் பேசினாள்.
மதியம் நேரம் ஆகும் போது சபேசன் மற்றும் துளசி வாசுதேவனின் வீட்டை வந்தடைந்தனர்.
துளசி நேராக, “சுபா” என்று கத்திக் கொண்டே உள்ளே வந்தவர் அவளைப் பார்த்ததும் அடித்தார்.
“ஏன்டி இப்படி பண்ண எங்கள பத்தி யோசிச்சு பாத்தியா? அஸ்வின் கிட்ட பிரச்சனைனா நேரா மதுரைக்கு வர வேண்டியது தான நாங்க உயிரோட தான இருந்தோம் செத்தா போயிட்டோம். இங்க பாரு எப்படி இருந்த மனுஷன் உங்க அப்பா இப்போ பாரு எலும்பும் தோலுமா ஆயிட்டாரு பாரு” என்று அழுதார் துளசி.
ஓடிவந்து தன் தாய் தந்தை கால்களில் விழுந்த சுபா,
“அப்பா என்னை மன்னிச்சுடுங்க ஏன் பா என்கிட்ட பேச மாட்டேன்றீங்க வேணும்னா என்ன அடிங்க பா ஆனா பேசாம இருக்காதீங்க” என்று அழுதாள்.
“உன்னை எப்போ அந்த ராட்சசன் நாசமாக்கி கட்டாயக் கல்யாணம் பண்ணி உன்னை சித்திரவதை படுத்துனானோ அப்போவே என் உயிர் பாதி போய்டுச்சு சுபாம்மா. நீ வீட்ட விட்டு போனதுக்கு அப்பறம் உயிரோடு இருக்கியா இல்லயானே தெரியல மா அதான் பித்து பிடிச்ச மாதிரி ஆயிட்டேன். இந்த வீட்டு வாசப்படி மிதிக்க கூடாதுன்னு இருந்தேன் ஆனா உன்னையும் என் பேரனையும் கூட்டிட்டு போகத் தான் வந்தேன்” என்றார் சபேசன்.
இதை எல்லாம் பின்னாடி நின்று இரு கைகளைக் கட்டி கம்பீரமாக கேட்டுக்கொண்டிருந்த அஷ்வின் தன் கையைத் தட்டினான். தான் இன்று மதியம் சாப்பிட வருவதாய் காலையில் சொன்ன அஷ்வின் வரும் சமயத்தில் தான் இது நிகழ்ந்தது.
“நல்லா இருக்கே நீங்க சொல்றது… ஆனா நீங்க நினைக்குறது நடக்காது மாமா” என்று சபேசனைப் பார்த்து முதல் முறையாக மாமா என்று அழைத்தான் அஸ்வின். இதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் சுபா, சபேசன் உட்பட.
“என் பையன என்கிட்ட இருந்து பிரிக்க யாருக்கும் அனுமதி கிடையாது இது சுபா நினைச்சாலும் முடியாது” என்று தீர்மானமாகக் கூறினான்.
இந்த முறை வாயைத் திறந்த வாசுதேவன், “சபேசன் மாப்பிள்ளை நீங்க கொஞ்ச நாள் சுபாவையும் பேரனையும் கூட்டிட்டுப் போங்க சுபாவுக்கு மன நிம்மதி வேணும் மத்தது லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்றார் வாசுதேவன்.
“அதற்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்” என்றான் அஸ்வின்.
“சசிகலா உன் மகன் இந்த விஷயத்துல ஒத்துழைக்கலனா நான் உயிரோடு இருக்க மாட்டேன்” என்றார். இன்னும் வாசுதேவன் அஸ்வினோடு பேச வில்லை. சுபா மறுப்பு தெரிவிப்பாளா என்று எதிர்பார்த்த அஸ்வினிற்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. கோபத்தில் யாரிடமும் பேசாமல் தன் அன்னையைப் பார்த்து,
“அவ கிளம்பட்டும் ஆனா சித்துவை நான் பார்க்காமல் இருக்க முடியாது எனக்கு அவனை வீடியோ கால்ல அப்போ அப்போ காட்டணும் அவனை மட்டும்” என்று அழுத்தமாக சுபாவைச் சுடும் பார்வை பார்த்து விட்டுச் மாடி ஏறிச் சென்றான்.
அடுத்த நாள் காலை வாசுதேவனே தன் காரில் அனைவரையும் மதுரைக்குக் கொண்டு வந்து விடுவதாய் உறுதி அளித்தார். சபேசனும் துளசியும் சித்துவை கூட்டிக்கொண்டு அன்று மாலை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்றனர். தீபிகாவும் அரவிந்தும் சர்வேஷோடு சென்றனர்.
சுபாவிற்கு மாதவிடாய் என்பதால் அவள் செல்லவில்லை. மதியம் கோபத்தோடு மாடிக்குச் சென்ற அஸ்வின் பின் தன் அறையைத் திறக்கவில்லை அப்போது மாளவிகா சோனியாவைக் கூட்டிக்கொண்டு அஸ்வின் வீட்டிற்கு வந்தாள்.
அவர்களை வரவேற்ற சசிகலா மாளவிகாவை தனியாக வர வைத்து, “சோனியாவ எதுக்கு இப்போ இங்க கூட்டிட்டு வந்த? உனக்கு அஸ்வின் கிட்ட அடி வாங்குனா தான் புத்தி வரும்” என்றார் சசிகலா. சுபா இன்னொரு அறையில் பொழுதைக் கழித்தாள். அஸ்வினின் கோபம் அவளுக்கு பயமாக இருந்தது அறைக்குச் செல்லவும் பயமாக இருந்தது.
அவன் சாப்பிடவும் இல்லை அதனால் சசிகலாவிடம் சொல்லி அஸ்வினை சாப்பிட அழைக்கும்படி சொல்லலாம் என்று அவள் கீழே சென்ற போது தான் சோனியா ஹாலில் உட்கார்ந்து மேகசின் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இவளைக் கண்ட சோனியா அலட்சியமாக திரும்பினாள். சமையலறைக்குச் செல்லலாம் என்று உள்ளே போன போது தான் மாளவிகா தன் அன்னையோடு பேசிக்கொண்டிருந்தாள்.
இவளைக் கண்டு முகத்தைத் திருப்பிய மாளவிகாவிடம், “அண்ணி நல்லா இருக்கீங்களா அவந்திகா வரலையா? அவினாஷ் அண்ணா நல்லா இருக்காங்களா?” என்று விசாரித்தாள்.
“உன் கிட்ட எனக்கு பேச விருப்பம் இல்லை சுபா ப்ளிஸ் போய்டு… இவ லெட்டர் எழுதி வெச்ச மாதிரியே இன்னொரு பொண்ண சோனியாவ கல்யாணம் பண்ணிருந்தா அஸ்வின் அண்ணாவோட நிம்மதி போய்ருக்காதுமா” என்று கோபத்துடன் கூறினாள்.
“வாய மூடு மாளவிகா அஸ்வின் பொண்டாட்டி இவ தான் இவங்களுக்கு இப்போ குழந்தை இருக்கு எப்படி உன்னால இப்படி பேச முடியுது” என்று கோபத்தில் கூறினார் சசிகலா.
கண்ணில் அழுகை மூண்டுக் கொண்டு வந்த சுபா நேராகச் சென்றது அஸ்வினின் அறைக்கு அஸ்வின் தன்னுடைய லாப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ப்ளிஸ்” என்றாள்.
“பேசு” என்று தன் லாப்டாப்பை மூடிவைத்தான்.
“அன்னிக்கு நம்ம ரிசப்ஷன் அப்போ நீங்க ஏன் சோனியாவ கட்டி பிடிச்சீங்க?” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.
“என்னது நான் கட்டிப்பிடிச்சேனா? கம் அகைன் என்னை கட்டிப்பிடிச்சது சோனியா அதுவும் ஒரு ஆறுதலுக்காகப் பண்ணா லுக் சுபா உன் பிரச்சனை என்னனா நம்பிக்கை இல்லை என் மேல… நம்ம முதல் முறையா மீட் பண்ணும் போது கூட அதான் நடந்தது. உன்னை காப்பாத்த கட்டிப்பிடிச்சேன்.”
“நீ அதை ஆராயமல் அடிச்சு என் கோபத்தை தூண்டிவிட்டு என் தாத்தா பாட்டி வெறுக்குற அளவுக்கு என்னை போட்ரேட் பண்ணிட்ட… அவங்க சாகும் போது கூட நான் இல்லை என் கூடயும் அப்புறம் அவங்க பேசல நான் சோனியாவ கல்யாணம் பண்ணனும்னு நினைச்சிருந்தா நீ போன இந்த நாலு வருஷத்துல பண்ணிருக்கலாமே எதுக்கு பண்ணாம இருக்கணும்.”
“நான் உனக்கு இவ்வளவு எக்ஸ்பிளைன் பண்ணனும்ல உனக்கு என்ன பார்த்தாலே கெட்டவன் மாதிரி தான் தோணுதா?” என்று கர்ஜித்தான்.
“இல்ல அது வந்து நீங்க சோனியாவ உங்க பக்கத்துலயே வெச்சிக்கலாம்னு நினைச்சு தான் வேலை கொடுத்ததா சொ…”
“ஜஸ்ட் ஸ்டாப் இட் நான் தான் உன்னை மதுரை கிளம்ப சொல்லிட்டேன்ல… அப்போ எதுக்கு இந்த கேள்விலாம் நீ கேட்குற உனக்கு அந்த உரிமை இல்லை… சோனியாவ ஆபீஸ்ல வெச்சேன். என் கூட இப்போ வீட்டுலயும் வெச்சிப்பேன் போதுமா? கிளம்பு என் கண் முன்னாடி நீ இருந்தேனா உன்னை கொன்னுட போறேன் சித்துக்காக விடறேன்” என்று தன் அறையில் இருந்த நாற்காலியை வேகமாக தள்ளி விட்டுச் சென்றான்.
சோனியாவை அஸ்வின் வேலையை விட்டு தூக்கியது வீட்டில் யாருக்கும் அவன் சொல்லவில்லை.
சோனியாவின் வருங்கால வாழ்க்கையைக் கருதி அனைவரிடமும் சோனியாவைப் பற்றி அவன் பேசவில்லை அஸ்வினிற்குத் தெரிந்தது சோனியா அஸ்வினை மணம் புரிய நினைப்பது ஆனால் அவன் பிரச்சனை சோனியா அல்ல சுபா.
ஆம் சுபாவின் நம்பிக்கை இன்மையே தான் அவன் பிரச்சனை அவளிடம் எக்ஸ்பிளைன் செய்து கடுப்பான அஸ்வின் சோனியாவை வேலை விட்டு தூக்கியதை கூறவில்லை.
நேஹாவின் கான்டாக்ட்டை கட் செய்த அஸ்வினால் சோனியாவை அப்படி பண்ண முடியவில்லை. ஏனெனில் இதில் அவன் தங்கை வாழ்க்கையும் அடங்கி இருக்கு அதுப்போக அவளும் இதுக்கு உடந்தை என்பதால் சோனியாவின் மீது முழுப் பழி போட அஸ்வின் விரும்பவில்லை.
கோபத்தில் கீழே இறங்கி வந்த அஸ்வின் அங்கு சோனியா இருப்பதைப் பார்த்தான்.
“ஹாய் அஸ்வின் அது வந்து எனக்கு வேலை வேணும் வந்து உங்க கம்பெனில…” என்று சொல்லும்போதே, “டு பி பிராங்க் நீ நல்லா வேலை பார்க்கிற சோனியா உனக்கு என் பிரண்ட் கம்பெனில நானே ரெகமென்ட் பண்றேன்” என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
