பிரியாதிரு 17
“அமிர்தா.. உன் அண்ணி உன் கிட்ட பேசணுமாம்” என புன்னகைத்தபடி தன்னவளிடம் ஃபோனை கொடுத்தான் இந்திரஜித்.
“ஏய் அம்மு” என பாசமாக ஆரம்பித்த சாருபாலா அமிர்தாவின் திடீர் திருமணத்தைப் பற்றி கேட்கவில்லை…
அவளுக்கு அனன்யா மூலம் தெரிந்தது.. அமிர்தாவின் நலன் மட்டுமே அவளின் கருத்தில் பட, திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்று பொய் சொன்னாள் அமிர்தா.
ஆத்மனை யாரிடமும் அவளால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.. மஞ்சள் கயிறு மகிமை அவளுள் தொடங்கிவிட்டது போல..
சாருபாலா பேசி முடித்த வைத்த பின்னர் தன் கணவனின் ஃபோனை அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டுச் செல்ல, “ஓய்” என்றழைத்தான் இந்திரஜித்.
அதை காதில் வாங்கியும் வாங்காது போல் சென்ற மனைவியின் கைப்பிடித்த இந்திரஜித், “இன்னும் கோபம் போகலையா டி!” என ஏக்கமாக கேட்டான்.
“பின்னே என்கிட்ட அம்முக்கு கல்யாண விஷயத்தை நீங்க சொல்லாம அப்படியே மறைச்சிட்டீங்க.. அப்போ உங்களுக்கு நான் நம்பிக்கை ஆனவள் இல்ல அப்படி தானே” என கோபமாக ஆரம்பித்தவள் முடிக்கையில் அவளின் கண்கள் கலங்கி குரல் கரகரத்தது..
அவளைத் தன் புறம் திருப்பி அவளின் முகத்தை தன் கைகளுக்குள் ஏந்தியவனின் கண்கள் அவளின் கலங்கிய விழிகளை துடைத்தபடியே,
“நம்பிக்கை நிறைய இருக்கு டி… உனக்கு உன்னோட பிரண்ட்ஸ் தான் எல்லாமே.. இந்த உண்மை உனக்கு தெரிஞ்சா கண்டிப்பா உன்னால சும்மா இருக்க முடியாது.. ஆத்மன் மேல கோபம் வரும்.. அவங்க சேரணும் அதானே நமக்கு வேணும்” என்றான் அவளின் முகத்தை மென்மையாக ஆட்டியபடி.
“அமிர்தா மனசுல..” என சாருபாலா ஆரம்பிக்க,
“அவ மனசுல எனக்கு தெரிஞ்சு ஆத்மன் தான் இருக்கான்… சர்வாவை அவள் காதலிச்சு இருந்தா கண்டிப்பா அவ எனக்கே சொல்லியிருப்பா சாரு” என்றவன் விளக்க, சாருபாலாவிற்கும் அமிர்தா ஆத்மன் பெருமையாக பேசிய விதம் புரிபடத் தான் செய்தது.
மனைவியின் தெளிவான முகத்தைக் கண்டவனோ, அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அவளின் இதழை ஆட்கொள்ள செல்லும் போதே,
“அ.. அண்ணா கல்யாணம் பண்ணிக்க போறான்” என கண்களில் நீர் திரள சொன்னாள்.
“அதெல்லாம் எனக்கு தெரியும் டி…” என்று அவன் சொல்லும் போதே, வெடித்து அழுதாள் சாருபாலா.
அதில் பதறிய இந்திரஜித்தோ, “சாரு” என அவளை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கியவன், “நீ ஏன் டி அழுற” என ஆதங்கத்துடன் கேட்டான்.
“உங்களை ஃபேஸ் பண்ண ஒரு மாதிரி கில்ட்டியா இருக்கு… அண்ணா பண்ற வேலை நினைச்சா” என சோர்வாக சொன்னவள் அவனின் மார்பில் தன் முகத்தை ஆறுதலாக வைக்க,
அவளை தன்னை நோக்கி நிமிர்த்தியவன், “மத்தவங்க லைஃப்ல வர பிரச்சனைகளுக்கும் நம்ம லைஃப்யயும் நான் எப்போவுமே ரிலேட் பண்ண மாட்டேன் சாரு.. எனக்கு இந்த உலகத்துல.. இல்ல இந்த உலகமே நீ தான்” என காதல் கலந்த ஆசையுடன் அவன் சொல்ல, அவன் கொடுக்க வந்த முத்தத்தை இவள் கொடுத்து முடித்தவள் விலக,
அவளை நகர விடாமல் கையைப் பிடித்தவன், “ஐ நீட் யூ” என தாபத்துடன் அவளை நெருங்கி அவளை முழுதாக காதலுடன் ஆட்கொண்டு முடித்தான் அவளின் இந்திரஜித்…
***
அபினவ் சர்மா என்ற செய்வது என்று தெரியாமல் தலையில் கையை வைத்து அமர்ந்து இருந்தார்.
இந்திரஜித் கால் செய்து வைத்ததில் இருந்தே அவருக்கு பயம்…
“என் தங்கச்சி அங்க வேலை விஷயமா வந்திருக்கா… அவளை அங்க இருந்து போக சொன்னீங்கன்னா என்னால இந்த கல்யாணத்தை கூட நிறுத்த முடியும் மிஸ்டர் அபினவ் சர்மா” என்றான் இந்திரஜித் அதிகாரமாக.
சோனியா ஒன்றும் வேண்டும் என்றே விக்னேஷின் கல்யாணத்திற்கு வரவில்லையே.. தவறு அவள் மீது இல்லை என்னும் பட்சத்தில் அவளைக் காக்க அவளின் அண்ணன் இந்திரஜித் கண்டிப்பாக வருவான்..
இதோ அவன் பேசிய தோரணையில் நடுங்கிய அபினவ் சர்மா, “அவங்க தாராளமா இருக்கட்டும் சார்” என பவ்வியமாக சொல்லி வைத்தவர் மகளைத் தான் கோபத்தில் கட்டி விட்டார்.
“உனக்கு ஊர் உலகத்துல காதலிக்க வேற யாருமே கிடைக்கலயா” என தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்.
அமிர்தாவின் விஷயம் அறிந்து அவனின் அன்னைக்கு கால் அடித்தான் விக்னேஷ்.. அவர் எடுக்கவில்லை. இவனோ தொடர்ந்து அடிக்க எடுத்தது என்னவோ முருகன் தான்.
அம்மா என்று நினைத்து, “அம்மா அமிர்தா எப்படி இருக்கா அந்த ஆத்மன் முதல்ல நல்லவனா? அவன் எப்படி அமிர்தாவை யார் சம்மதமும் இல்லாம கல்யாணம் பண்ணலாம்” என்று அவன் அக்கறையாக கேட்க,
“கட்டுன பொண்டாட்டியை வெச்சிட்டு இன்னொரு பொண்ணை கட்டப் போன நீயெல்லாம் இதைப் பத்தி பேசவே கூடாது… நீ என்னை மதிச்சு கல்யாணம் பண்றியா என்ன! அமிர்தா புருஷன் உன்னை போல மோசம் இல்ல கட்டுன பொண்டாட்டியா பத்திரமா பாத்துக்குறாரு” என்று கோபமாக சொல்ல, பட்டென்று கால்லை அணைத்து விட்டான் விக்னேஷ் கார்த்திக்.
தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டு இருந்த விக்னேஷிற்கோ தலைக்கு மேல் அப்படி ஒரு கோபம்..
அவனின் தந்தை பேசிய எல்லாவற்றுக்கும் அவனின் கோபம், கடுப்பு எல்லாம் அப்படியே சோனியாவின் பக்கம் திரும்பியது…
அதே கோபத்துடன் அவளை தேடிச் சென்றான் விக்னேஷ்..
