“யாரு அந்த கருப்பியா!” என அதிர்ந்து கேட்டார் சித்ரா.
“நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி இருக்கா அவ” என சகுந்தலா தேவி அதட்ட,
“அப்படிப்பட்டவளை கட்டுனா மட்டும் தான் இஷாக் அத்தான் அவ பக்கம் சாயாம இருப்பாரு” என்றாள் விசித்திரா தந்திரமாக…
இருவருக்குமே விசித்திரா சொல்வது புரிந்துவிட்டது…
இதோ இப்போது மகன் மற்றும் மருமகள் முன்னே கம்பீரமாக நின்றவர்,
“விஷாக் தான் இந்த வீட்டுல மூனாவது பையன்… அங்கே பவித்ரா தான் சின்னப் பொண்ணு… அதனால பவித்ரா தான் அவனுக்கு பொருத்தம்… முத்துமாரி இஷாக்குக்கு தான் ஒத்து வரும்” என்றார் பட்டென்று.
“ஆனா அத்தை இஷாக் அந்தப் பொண்ணை” என சொல்ல முடியாமல் திணறினார் காயத்ரி.
மகன் அப்பெண்ணை வாட்டி வதைத்து விடுவானோ என்கிற பயம் அவருக்கு..
“நான் சொன்னா சொன்னது தான்… இந்தா பவித்ரா ஃபோட்டோவை விஷாக்குக்கு காட்டு” என்றார் சகுந்தலா தேவி கட்டளையாக.
அதற்கு மேல் காயத்ரி மற்றும் சக்கரவர்த்தியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை…
மௌனியாகிப் போனார்கள்…
இதில் சக்கரவர்த்தி வேறு பொண்ணு பேஷன் டிசைனிங் படித்து இருக்கிறாள் என முத்துமாரியை மனதில் வைத்து விஷாக்கிடம் சொல்லி இருக்க, அவருக்குமே இப்போது என்ன செய்ய என்று தெரியவில்லை..
ஆனாலும் விஷாக்கிடம் இதனைப் பற்றி கண்டிப்பாக சொல்லி ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில், விஷயத்தை மனைவியிடம் பகிர அவருமே கதிகலங்கிப் போனார்.
தன் இரண்டாவது மகன் தன்னிடம் நெருக்கம் இல்லை என்றாலும் கூட அவன் கண்டிப்பாக முத்துமாரியை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றே அவருக்குத் தோன்றியது..
ஏனெனில் இஷாக் இருப்பது திரைத்துறை.. அழகுக்கு பஞ்சமே இல்லாத பெண்கள்… பேரழகிகள் இருக்கும் இடம்!
மகனின் அழகும் கம்பீரமும் அந்தத் துறையில் எப்படி எல்லாம் பாராட்டப்படுகிறது, ரசிக்கப்படுகிறது என்பதை தொலைக்காட்சி மூலம், கிசுகிசுக்கள் மூலம், அவனின் ரசிகைகள் பட்டாளம் மூலம் ஏன் அவனின் சக நடிகர்கள் கூட அவனின் அழகு மீது பொறாமை என்று அரசல் புரசலாக பேசுவது போன மாதம் கிசுகிசுப்பில் வந்ததே…
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒரு முன்னனி இளம் ரசிகை இஷாக்கிடம் நெருங்க முயற்சிப்பது கூட அவருக்கு ரகசிய செய்தியாய் வந்ததே…
இஷாக் தன்னுடைய வளர்ப்பு இல்லை என்றாலும் தன் மாமியார் வளர்ப்பில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது..
தனக்கு எதிராக மகனை திசை திருப்பினார் தான்.. ஆனால் அவனுக்கு நல்ல பழக்க வழக்கங்களை தான் சொல்லி கொடுத்து வளர்த்தார்.
அதனால் மகனின் மீது மலையளவு நம்பிக்கை.. இருந்தாலும் அவன் எப்படி முத்துமாரியை ஏற்றுக் கொள்வான்? அதற்கு தான் பாவம் அவருக்கு விடை தெரியவில்லை.
விஷாக்கும் அழகன் தான்… கம்பீரமானவன் தான்!
அவனிடமே அவனின் தொழில் முறை நண்பர்கள் பெண்கள் சிலர், “உங்க அண்ணா நல்ல ஸ்மார்ட் விஷாக்.. அவருடைய ஃபேன் நான்” என்று சொல்லி இருக்கிறார்கள் என்றால் இஷாக் அப்பேர்ப்பட்ட ஆணழகன் அல்லவா.
விஷாக் மட்டும் முத்துமாரியை ஏற்றுக்கொள்வானா என்ன என்கிற கேள்வி வரலாம்..
அவர்களின் எண்ணவோட்டத்தின் நடுவே வந்த விஷாக், “அம்மா” என்று ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டான்.
“உங்க கிட்ட பேசாம என்னால இருக்க முடியாது.. நீங்க யாரை சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.. என்னோட அம்மா எனக்கு பெஸ்ட் சாய்ஸ் தான் பாப்பாங்கன்னு எனக்குத் தெரியும்” என்று அவன் கண்கள் கலங்கி சொல்ல அன்னையோ ஸ்தம்பித்து நின்று விட்டார்.
அப்போது வேகமாக வந்த சகுந்தலா தேவி, “இதான் நீ கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு” என்று அவசரமாக ஃபோட்டைவைக் காட்ட, மாநிறத்தில் அழகே உருவாக நின்றுக் கொண்டு இருந்த பவித்ராவை அவனுக்கு பிடிக்காமல் போகுமா என்ன!
“எனக்கு ஒகே” என்று புன்னகை மலர சொன்ன மகனிடம் அவள் படிக்கவில்லை என்னும் விடயத்தை எப்படி சொல்வது என்று புரியாமல் விழித்தார்கள் பெற்றோர்கள்.
சக்கரவர்த்தியோ, “விஷாக் இந்த பொண்ணு படி..” என்று ஆரம்பிக்க,
காயத்ரியோ அவசரமாக, “இந்தப் பொண்ணு தான் ஃபேஷன் டிசைனிங் படிச்சிருக்கா” என்றார் அவசரமாக.
பாட்டிக்கு தான் அனைவரின் ஜாதகமே தெரியுமே..
அவரோ மனதில், ‘இவன் நண்பர்கள் படிக்கலன்னாலே கூட சேர்த்துக்க மாட்டான்.. பொண்டாட்டி சுத்தமா படிக்காதவ வந்தா என்ன செய்யப் போறானோ!” என்று அவர் ஆழ்ந்து யோசிக்க, அதே யோசனை தான் பெற்றவர்கள் இருவருக்கும்…
ஆனாலும் காயத்ரிக்கு அப்போது கணவனின் உயிர் தான் முதன்மையாகப் பட்டது… எபஎப்படியாவது மகன்கள் மூவருக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் திருமணம் நடந்தால் தான் தன் கணவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று உணர்ந்தவர் கணவனை உண்மையை உரக்க சொல்ல விடாது தடுத்தார்.
ஆம்.. விஷாக் கிற்கு எல்லாவற்றையும் விட படிப்பு தான் முக்கியம்..
அவனுடன் படித்த நண்பர்கள் கூட சரியாக படிக்கவில்லை என்று பேசுவதை நிறுத்தியவன்..
அதையும் விட ஒரு பெண்ணைக் காதலித்து இருந்தான்.
பவித்ராவை விட நல்ல பேரழகி…
அவனுடன் கல்லூரியில் படித்த ஜூனியர் பெண்…
இருவருமே கல்லூரிக்காக விளையாடிய ஒரு கேள்வி பதில் போட்டியில் தான் நட்பானார்கள்.
நாளடைவில் அது காதலானது..
காதலில் பல்கி பெருவி படிப்பை கோட்டை விட்ட அப்பெண் சரண்யா, விஷாக்கைப் போல பெரிய கோடீஸ்வரி தான்..
சக்கரவர்த்தி தொழில்முறை நண்பனின் மகள் தான்.. ஏற்கனவே சரண்யாவை விஷாக் கிற்கு தெரியும்.
விஷாக்கை வைத்து தான் சரண்யாவை அவன் படிக்கும் கல்லூரியில் சேர்த்தார்கள்.
விஷாக்கும் சரண்யாவும் கல்லூரியில் காதல் புறாக்களாய் வலம் வந்த விஷயம் மொத்த குடும்பத்துக்கும் தெரியும்…
வீட்டினர் அனைவருக்கும் சந்தோஷமான மனநிலையே..
ஆனால் ஒருநாள், “நான் சரண்யாவை பிரேக் அப் பண்ணிட்டேன்” என்று இறுகிய முகத்துடன் அவன் சொன்னபோது அனைவரும் ஸ்தம்பித்து தான் போனார்கள்..
“என்ன ஆச்சு விஷாக்?” என காயத்ரி புரியாமல் பதற,
“செமஸ்டர் ல ஃபைல் ஆயிருக்கா! இடியட்..” என்று அவன் கடுப்பாக சொல்ல,
“இதெல்லாம் ஒரு விஷயமா” என புரியாமல் கேட்டார் சகுந்தலா தேவி.
“ஆமா பாட்டி.. இது மட்டும் தான் முக்கியமான விஷயம்.. அவளை நான் காதலிக்கும் போது அவ கிளாஸோட டாப்பர்.. ஆனா இப்போ ஃபெயில் ஆயிருக்கா… என்ன காதலிச்சு அதையே மனசுல நினைச்சு ஃபெயில் ஆயிட்டாளாம்.. இவ லாம் என்ன பொண்ணு.. அடி முட்டாள்.. அவ எனக்கு வேணாம்.. இனி அவளைப் பத்தி நீங்களும் பேசாதீங்க” என்று முடித்தவன் ஆயிற்றே..
இவன் எப்படி பத்தாவது வகுப்பு.. அதுவும் தமிழ் மீடியத்தில் படித்த பவித்ராவை திருமணம் செய்து கொள்வான்..
விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக திருமணம் நடக்காது என்று அறிந்த காயத்ரி, அதான் முத்துமாரியை விஷாக்குக்கு யோசித்தார்.
அழகை விட அவனுக்கு படிப்பு தான் முக்கியம்..
முத்துமாரி மங்கிய நிறம் தான்.. ஆனால் லட்சணமான முகம், என்ன சற்று உருண்டையான தேகம்..
கண்டிப்பாக விஷாக்குக்கு முத்துமாரியை பின்னாளில் ஆவது பிடிக்கும் என்று காயத்ரி நினைத்திருக்க, இப்போது பவித்ராவை இழுத்து வந்தது பெரிய தலைவலியாகி போயிற்று பெற்றவர்களுக்கு..
இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என்றால் இந்த பொய் உடையக் கூடாது என்று முனைப்பாய் இருந்த காயத்ரி கணவனிடமும் இதை மகனிடம் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கி விட்டார்.
